'ஹனிடிராப்' முறையில் தொழில் அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய 7 பேர் கைது


ஹனிடிராப் முறையில் தொழில் அதிபரிடம்  பணம் கேட்டு மிரட்டிய  7 பேர் கைது
x
தினத்தந்தி 29 Jun 2023 6:45 PM GMT (Updated: 29 Jun 2023 6:46 PM GMT)

மங்களூருவில் ‘ஹனிடிராப்’ முறையில் தொழில்அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய இளம்பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மங்களூரு-

மங்களூருவில் 'ஹனிடிராப்' முறையில் தொழில்அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய இளம்பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொழில் அதிபர்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கு இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த இளம்ெபண், தொழில் அதிபரிடம் ஆசைவார்த்தைகள் கூறி உல்லாசமாக இருக்க வரும்படி அழைத்துள்ளார். அதன்படி தொழில்அதிபரும் சென்றுள்ளார். அங்கு வைத்து இளம்பெண்ணுடன் தொழில் அதிபர் அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக இருந்துள்ளார். அந்த சமயத்தில் அவர்கள் இருந்த அறைக்குள் 6 பேர் நுழைந்துள்ளனர்.

அப்போது அவர்கள் அரைகுறை ஆடைகளுடன் நெருக்கமாக இருந்த இருவரையும் படம் மற்றும் வீடியோ எடுத்தனர். பின்னர் அந்த படங்களை காண்பித்து தங்களுக்கு பணம் கொடுக்காவிட்டால், அவற்றை வெளியிடுவதாக மிரட்டி உள்ளனர். அப்போது தான் இளம்பெண்ணும் அந்த கும்பலை சேர்ந்தவர் என்பது தொழில் அதிபருக்கு தெரியவந்தது.

7 பேர் கைது

இதையடுத்து இளம்பெண் உள்பட 7 பேரும் ஹனிடிராப் முறையில் தன்னை வலையில் சிக்க வைத்து பணம் பறிக்க முயற்சி செய்வது அவருக்கு தெரியவந்தது. இந்த நிலையில், வீட்டுக்கு சென்று பணம் எடுத்து வருவதாக கூறி சென்ற தொழில் அதிபர், இந்த சம்பவம் குறித்து காவூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் உள்பட 7 பேரையும் கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் சுரேந்திரா என்கிற பிரீத்தம் (வயது 29), முரளி என்கிற முரளி கிருஷ்ணா (26), கிஷோர் (32), சுஷாந்த் (23), லிக்கித் (23), தருண் (20), அக்ஷதா (24) என்பது தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

விசாரணையில் அவர்கள் இதேபோன்று தொழில் அதிபர்களிடம் ஹனிடிராப் முறையில் பணம் பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து கைதான 7 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story