கார்த்திகை தீபத்திருவிழா: கோவில்களில் சிறப்பு வழிபாடு

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கார்த்திகை தீபத்திருவிழா: கோவில்களில் சிறப்பு வழிபாடு
Published on

சாத்தூர்,

வெம்பக்கோட்டை தாலுகா துலுக்கன்குறிச்சியில் வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜை நடைபெற்றது. அணைகள் நிரம்ப வேண்டியும், விவசாயம் செழிக்கவும் சிறப்பு பூஜை நடந்தது.

தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தப்பட்டு கோவிலின் மேற்புறத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தளவாய்புரம்

தளவாய்புரம் தெப்பையங்குளம் சுப்பிரமணிய சுவாமி, வடக்கு மாரியம்மன், கொம்மந்தாபுரம் மாரியம்மன், செட்டியார்பட்டி மாரியம்மன், சேத்தூர் அருகே தேவதானம் நாகமலை குமாரசுவாமி ஆகிய கோவில்களில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இரவு சுவாமி சப்பரத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது. பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை தளவாய்புரம், சேத்தூர் போலீசார் செய்திருந்தனர்.

வத்திராயிருப்பு

வத்திராயிருப்பு காசிவிசுவநாதர் கோவிலில் காசிவிஸ்வநாதருக்கும், சிவகாமி தாயாருக்கும், சுப்பிரமணிய சுவாமிக்கும் கார்த்திகையையொட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் மாலையில் 1,008 தீபங்கள் ஏற்றி சிறப்பு வழிபாடு நடந்தது.

மூவரை வென்றான் மலைக்கொழுந்தீஸ்வரர், கூமாபட்டி காளியம்மன் கோவில், முத்தாலம்மன் கோவில், வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோவில், மாரியம்மன் கோவில், சந்தனமாரியம்மன் கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் கார்த்திகையையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இருக்கன்குடி

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் கார்த்திகையையொட்டி அம்மனுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரன்டு ராமகிருஷ்ணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக செயல் அலுவலர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர் ராமமூர்த்தி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் 2 இடங்களில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக ஆண்டாள் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க சர்வ அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் கோவில் முன்புறம் சொக்கப்பனை வைக்கப்பட்டு இருந்த இடத்தின் அருகே கொண்டுவரப்பட்டனர் அதேபோல் பெரிய பெருமாளும் கொண்டுவரப்பட்டார்.

அதன்பின் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com