நெல்லை கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

நெல்லை கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
Published on

நெல்லை,

நெல்லை கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லையில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லையில் உள்ள கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

வீடுகளிலும் கிருஷ்ணர் படங்கள் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. கோசாலைகள் சுத்தம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான் கோவிலில் நேற்று காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் மகா சிறப்பு ஆரத்தியும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு காலையில் பெருமாள், கிருஷ்ணர் அலங்காரத்தில் காட்சி அளித்தார். மாலையில் எட்டெழுத்து பெருமாள் கோவில் அருகே உள்ள கோசாலையில் சிறப்பு வழிபாடு நடந்தது. அங்குள்ள கோசாலைகள் சுத்தம் செய்யப்பட்டன. கோபால கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தன.

கிருஷ்ணருக்கு மண்பானையில் வெண்ணெய், நெய், முறுக்கு, அதிரசம், லட்டு, அல்வா, சீடை உள்ளிட்ட அனைத்து வகையான திண்பண்டங்களும் படைக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு வெண்ணை பூசப்பட்டது. 12 ஆயிரத்து 8 பானைகளில் கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. பிரசாதம் படைக்கப்பட்ட பானைகள், கலயங்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும் டோக்கன் வாங்கிய பக்தர்களுக்கு இன்று(திங்கட்கிழமை) பானைகள், கலயங்கள் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

விழாவில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கர், நீதிபதி சாமிநாதன், கோவை நாராயண ஜீயர், அகில பாரத துறவிகள் சங்க செயலாளர் ராமானந்தா சுவாமிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

பாளையங்கோட்டை ராஜாக்கள் தெருவில் உள்ள கிருஷ்ணன் பஜனை மடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நேற்று காலை 8 மணிக்கு பஜனை பூஜையும், இரவு 7 மணிக்கு உறியடிப்பு நிகழ்ச்சியும், 8 மணிக்கு சிறப்பு பூஜையும் நடந்தது.

நெல்லை டவுன் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் உள்ள சந்தான கிருஷ்ணர் சன்னதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சந்தான கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com