

பெங்களூரு:
பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பயங்கரவாதிகளுக்கு தொடர்பு
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய தையல்காரரான கன்னையா லால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலை பயங்கரவாதத்தின் ஒரு பாகம் ஆகும். இதற்கு பின்னணியில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான சந்தேகங்கள் உள்ளது. இதற்கு பின்னால் சர்வதேச அளவில் சதி நடந்திருக்கிறது. தையல்காரர் படுகொலைக்கு பின்னால் இருப்பவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
இந்த படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை தூக்கில் விட வேண்டும். இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் மாநில அரசு முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். விசாரணையின் போது தான் படுகொலைக்கு பின்னால் இருக்கும் பயங்கரவாத அமைப்புகள் பற்றிய தகவல்கள் தெரியவரும்.
உரிய விசாரணை நடத்தப்படும்
கமிஷன் விவகாரம் தொடர்பாக பிரதமரின் உத்தரவின் பேரில் மத்திய உள்துறை, மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கத்திடம் ஆவணங்களை வழங்கும்படி கேட்டு இருப்பது பற்றி நீங்கள் (நிருபர்கள்) கேட்கிறீர்கள். இதுபற்றி எனக்கு எந்த தகவலும் வரவில்லை. மத்திய உள்துறை ஆவணங்கள் கேட்டு இருந்தால், அதனை கொடுக்க எந்த பிரச்சினையும் இல்லை. பிரதமரின் உத்தரவின் பேரில் இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.