வேட்புமனு பெற அதிகாரி வராததை கண்டித்து கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு பூட்டு

வேட்புமனு பெற அதிகாரி வராததை கண்டித்து, கறம்பக்குடியில் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர். சூரக்காட்டில் சாலைமறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேட்புமனு பெற அதிகாரி வராததை கண்டித்து கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு பூட்டு
Published on

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் உள்ள தொடக்க வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கியில் 11 இயக்குனர்களை தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி காலை 10 மணிக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன், நகர செயலாளர் முருகேசன் ஆகியோர் தலைமையில் அக்கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

இதேபோல அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர், நகர செயலாளர் சதக்கத்துல்லா தலைமையில் வந்தனர். ஆனால் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் செயலாளர் மட்டுமே பணியில் இருந்தார். வேட்புமனு பெறும் தேர்தல் அதிகாரி 12 மணி வரை வரவில்லை. அதேவேளையில் அ.தி.மு.க.வினருக்கு மட்டும் முன்னரே வேட்பு மனு பெறப்பட்டதாக தி.மு.க.வினருக்கு தகவல் கிடைத்தது.

இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர், கூட்டுறவு சங்க அலுவலகத்தில் உள்ளே செயலாளரை வைத்து பூட்டு போட்டனர். பின்னர் வெளியே வந்த தி.மு.க.வினர் வேட்புமனு பெற தேர்தல் அதிகாரி வராததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அவர்கள் கறம்பக்குடி-பட்டுக்கோட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கறம்பக்குடி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதேபோல முள்ளங்குறிச்சி தொடக்க கூட்டுறவு சங்கத்திலும் வேட்பு மனு தர அதிகாரி வராததை கண்டித்து தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் தவபாஞ்சாலன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் முருகேசன் ஆகியோர் தலைமையில் சூரக்காட்டில் சாலைமறியல் நடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த 40 பேரை கைது செய்தனர். அவர்களை அப்பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.

மாங்கோட்டை கூட்டுறவு சங்கத்தில் வேட்புமனு வாங்காத அதிகாரிகளை கண்டித்து தி.மு.க.வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்தடுத்து சாலைமறியல், ஆர்ப்பாட்டம், முற்றுகை போன்ற போராட்டங்களால் நேற்று கறம்பக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் கறம்பக்குடி பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com