சத்திரப்பட்டி விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

சத்திரப்பட்டி விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தை கை விட்டு பணிக்கு திரும்பினர்.
சத்திரப்பட்டி விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்
Published on

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் மருத்துவ துணி உற்பத்தி செய்யும் விசைத்தறி தொழிலாளர்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்கான புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் கோரி கடந்த 4ந் தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கூலி உயர்வு தொடர்பாக தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் தாசில்தார் அலுவலகத்தில் 2 கட்டமாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனை அடுத்து, கூலி உயர்வு கோரி அடுத்த கட்டமாக தீவிர போராட்டங்களில் ஈடுபட தொழிலாளர்கள் ஆயத்தமானார்கள். இந்த நிலையில் சத்திரப்பட்டி மருத்துவ துணி உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில், உற்பத்தியாளர்கள், சிறு விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் புதிய கூலி உயர்வு குறித்து உடன்பாடு ஏற்பட்டது. ஒப்பந்தப்படி, 56 இன்ச் தறியில் பணியாற்றும் தொழிலாளருக்கு, 100 பாய்ண்ட் மருத்துவ துணி உற்பத்திக்கு, தற்போது உள்ள ஊதியமான ரூ. 86ல் இருந்து இந்த ஆண்டு ரூ.9.40 உயர்த்தப்பட்டு ரூ.95.40ம், அடுத்த ஆண்டு ரூ. 6.28 உயர்த்தப்பட்டு ரூ. 101.68ம், 3 ம் ஆண்டு ரூ. 5.49 உயர்த்தப்பட்டு ரூ. 107.17ம் வழங்க உற்பத்தியாளர்களும், சிறு விசைத்தறி உரிமையாளர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

மேலும் புதிய கூலி உயர்வு குறித்த ஒப்பந்தத்தில் 3 தரப்பினரும் கையெழுத்திட்டதால், வேலை நிறுத்தப்போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர். இதனை அடுத்து நேற்று காலை முதல் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர். அனைத்து விசைத்தறி கூடங்களிலும் தறிகள் இயங்கி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com