மதுரை ஆவணி மூல திருவிழா: பாணனுக்காக அங்கம் வெட்டிய திருவிளையாடல் லீலை

சுவாமி தங்க ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளினர்.
பாணனுக்காக அங்கம் வெட்டிய திருவிளையாடல் லீலை
Published on

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பல்வேறு சிறப்புகள், திருவிளையாடல்கள் நிறைந்த ஆவணி மூலத் திருவிழா நடைபெற்று வருகிறது. சிவபெருமானின் திருவிளையாடல்களை விளக்கும் வகையில் சிறப்பு அலங்காரம் தொடர்ந்து நடைபெறுகிறது.

கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு மோட்சம், மாணிக்கம் விற்ற திருவிளையாடல், தருமிக்கு பொற்கிழி அருளிய திருவிளையாடல், உலவாக்கோட்டை அருளிய லீலை ஆகிய அலங்காரங்களைத் தொடர்ந்து நேற்று, பாணனுக்காக அங்கம் வெட்டிய திருவிளையாடல் லீலை நடைபெற்றது.

பாணனுக்காக சென்று அங்கம் வெட்டிய திருவிளையாடல் அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். அங்கு சுந்தரேசுவரர் வேடம் அணிந்து கோவில் பட்டர் கையில் கேடயம், வாளுடன் இந்த திருவிளையாடலை நடித்து காண்பித்தார்.

இரவில் சுவாமி தங்க ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி ஆவணி வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று மாலையில் சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com