

லக்னோ,
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கிய மகா கும்பமேளா, வரும் 26-ந்தேதி நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் இதுவரை 56 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 38 சதவீதம் பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். மகா கும்பமேளா நிறைவு பெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை 60 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.