மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கோத்தகிரியில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனை திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர்.
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
Published on

கோத்தகிரி

கோத்தகிரியில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனை திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர்.

பழமை வாய்ந்த கோவில்

கோத்தகிரியில் உள்ள ஹேப்பிவேலியில் மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு, விநாயகர் மற்றும் நவக்கிரகங்களுக்கு தனி சன்னதிகள் கட்டப்பட்டது.

இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி காலை 10 மணிக்கு விநாயகர் வழிபாடு, மாலை 4 மணிக்கு தீர்த்த குடங்கள், முளைப்பாலிகை ஊர்வலம், விமான கலசம் கொண்டு வருதல், முதல் கால யாக பூஜை ஆகியன நடைபெற்றது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேகம்

இதையடுத்து இன்று அதிகாலை 5.45 மணி முதல் திருப்பள்ளி எழுச்சி, மங்கல இசை, 2-ம் கால யாக பூஜை, காலை 8 மணிக்கு தீர்த்த குடங்கள் கோவிலை சுற்றி வருதல் ஆகியன நடைபெற்றது.

தொடர்ந்து காலை 9 மணிக்கு கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்கம் மருதாச்சல அடிகளார் மற்றும் கோத்தகிரி மாரியம்மன் கோவில் சிவநெறி தொண்டர் சக்திவேல் ஆகியோர் தலைமையில் யாக வழிபாடுகள் நடத்தப்பட்டு, கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கபட்டது.

அன்னதானம்

இதைத்தொடர்ந்து விநாயகர் மற்றும் நவக்கிரக சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 9.30 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசித்து சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com