மோடியின் பொருளாதார, வியாபார கொள்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன சிவசேனா கருத்து

பிரதமர் மோடியின் பொருளாதார, வியாபார கொள்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சிவசேனா கூறியுள்ளது.
மோடியின் பொருளாதார, வியாபார கொள்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன சிவசேனா கருத்து
Published on

மும்பை,

மத்திய அரசு வேளாண் மசோதாக்களை கொண்டு வந்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகாலி தளத்தை சேர்ந்த மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பதவி விலகி உள்ளார். இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து சிவசேனா தனது கட்சி பத்திரிகையான சாம்னாவில் கூறியிருப்பதாவது:-

அகாலி தளம் கட்சியை சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பதவி விலகி உள்ளார். மோடி அரசு விவசாயிகளுக்கு எதிரான 2 மசோதாக்களை கொண்டு வந்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் ராஜினாமா செய்து உள்ளார். அவரது ராஜினாமாவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிவசேனா தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது. தற்போது அகாலி தளம் வெளியேறி இருக்கிறது. வாஜ்பாய், அத்வானி காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் அன்பு மற்றும் மரியாதையுடன் மதிக்கப்பட்டனர். அவர்கள் கொள்கை முடிவுகள் குறித்து கூட்டணி கட்சியினருடன் கலந்து ஆலோசனை நடத்தினர். அப்போது பேசிய வார்த்தைகளுக்கு மதிப்பு இருந்தது.

வேளாண் மசோதாக்கள் கொண்டு வரும் முன் மத்திய அரசு மராட்டியம், பஞ்சாப் மற்றும் மற்ற மாநிலங்களை சேர்ந்த விவசாய பிரதிநிதிகள், அமைப்புகள் மற்றும் வேளாண்மை வல்லுநர்களுடன் பேசியிருக்க வேண்டும். விமானநிலையம், துறைமுகம், ரெயில்வே, காப்பீடு நிறுவனம் போன்றவற்றை தனியார்மயமாக்க முயற்சி செய்வது போல மத்திய அரசு விவசாயிகளின் வாழ்க்கையையும் தனியார், வியாபாரிகளின் கட்டுபாட்டில் வைக்க முயற்சி செய்கிறது. மோடி அரசின் பொருளாதார, வியாபார, வேளாண் கொள்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

வேளாண் மசோதாக்களால் விவசாயிகள் பலன் பெறுவார்கள் என மத்திய அரசு கூறுகிறது. அப்படியெனில் அதுகுறித்து நாட்டில் உள்ள விவசாய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினால் என்ன தீங்கு ஏற்பட்டுவிட போகிறது? குறைந்தபட்சம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் அவர்கள் பேசியிருக்க வேண்டும். ஆனால் இந்த அரசு எதையும் செய்யவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com