

ஈரோடு
பெருந்துறை, அறச்சலூர் பகுதியில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பெருந்துறை
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சோதனையின்போது ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள்.
பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்க சோதனை சாவடி அருகே நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின்போது அந்த காரில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், காரில் வந்தவர் சென்னையை சேர்ந்த ஜிப்ஷா என்பதும், அவர் சென்னையில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா சென்றதும், செலவுக்காக பணம் வைத்திருந்ததும், தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பெருந்துறை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
அறச்சலூர்
இதேபோல் அறச்சலூர் அருகே உள்ள குமாரபாளையம் நொய்யல் சோதனை சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த காரில் வந்தவரிடம் ரூ.2 லட்சம் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்த பூபதி என்பதும், சொந்த வீடு கட்டுமான பணிக்காக ஈரோடு மாவட்டம் சிவகிரியில் மரச்சாமான்கள் வாங்குவதற்காக பணம் எடுத்து சென்றதும், தெரியவந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்ததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து மொடக்குறிச்சி தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.