தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பண ஆசை காட்டி மோசடி செய்யும் கும்பல் நடமாட்டம் கண்காணிப்பு

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பண ஆசை காட்டி மோசடி செய்யும் கும்பல்களின் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பண ஆசை காட்டி மோசடி செய்யும் கும்பல் நடமாட்டம் கண்காணிப்பு
Published on

தேனி,

சதுரங்க வேட்டை என்ற சினிமாப்பட பாணியில் சக்தி வாய்ந்த இரிடியம், மின்னல் தாக்கிய கலசம் உள்ளிட்ட பொருட்களை பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யலாம் என்றும், அத்தகையை பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனைக்கு இருப்பதாகவும் கூறி பண ஆசை காட்டி, மோசடி செய்யும் கும்பல்கள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கைவரிசை காட்டி உள்ளது. தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் இதுபோன்ற நூதன மோசடிகள் நடந்துள்ளன. இதுகுறித்து பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் பலரும் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து மக்களோடு நடமாடி வருகின்றனர். இவர்களில் சிலர் மீண்டும் இதுபோன்ற மோசடிக்கு திட்டம் தீட்டி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இதுபோன்ற மோசடி கும்பல்கள் நடமாட்டத்தை கண்காணிக்க இருமாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்.

கண்காணிப்பு

அதன்பேரில், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் போலீசார் இதுபோன்ற மோசடி நபர்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். அவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நபர்களின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வருகின்றனர். தனிப்பிரிவு போலீசாரும் இதுபோன்ற விவரங்களை சேகரித்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல்களை அனுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுபோன்ற மோசடி நபர்களிடம் மக்கள் உஷாராக இருக்க வேண்டும். ஆசை வார்த்தைகள் கூறி எளிதில் பண மோசடி செய்து விடுவார்கள். மாவட்டத்தில் யாரேனும் பாதிக்கப்பட்டு புகார் அளிக்காமல் இருந்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலோ அல்லது மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திலோ புகார் கொடுக்கலாம். மோசடி நபர்கள் யாரேனும் ஆசை வார்த்தைகள் கூறி அணுகினால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கலாம் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com