சுய ஊரடங்கு முடிந்தும் ஈரோட்டில் பெரும்பாலான கடைகள் அடைப்பு

சுய ஊரடங்கு முடிந்தும் ஈரோட்டில் நேற்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
சுய ஊரடங்கு முடிந்தும் ஈரோட்டில் பெரும்பாலான கடைகள் அடைப்பு
Published on

ஈரோடு,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 5 மணி வரை சுய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் ஈரோட்டில் பால் மற்றும் மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

இந்த நிலையில் சுய ஊரடங்கு முடிந்தும் ஈரோட்டில் பெரும்பாலான கடைகள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் ஈரோட்டில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பிரப் ரோடு, பெருந்துறை ரோடு, நசியனூர் ரோடு, சென்னிமலை ரோடு, சத்தி ரோடு, ஈ.வி.என்.ரோடு, நேதாஜி ரோடு உள்ளிட்ட ரோடுகளில் வாகன போக்குவரத்து குறைவாக இருந்தது. மேலும் மக்கள் நடமாட்டமும் இல்லை.

வெளி மாவட்டங்களில் இருந்து ஈரோட்டுக்கு வந்த வாகனங்களை ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச்சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது தேவையில்லாமல் ஈரோட்டுக்கு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் மாநகராட்சி ஊழியர்கள் ஒலி பெருக்கி மூலம் வீதிகளில் கூட்டமாக நிற்க வேண்டாம். தேவையில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் மாநகராட்சி ஊழியர்கள் ஈரோடு ரெயில் நிலையம் முன்பு கிருமி நாசினி தெளித்தனர்.

ஈரோடு ரெயில் நிலையத்துக்கு ஒரு சில ரெயில்கள் மட்டுமே நேற்று வந்து சென்றன. இந்த ரெயில்களிலும் பயணிகள் குறைவாகவே இருந்தனர். ரெயில்வே போலீசார் முககவசம் அணிந்தபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ரெயில்வே பணியாளர்கள், போலீசார் மற்றும் பயணிகளுக்கு ரெயில் நிலையத்தின் முன் பகுதியில் டாக்டர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடலின் வெப்பநிலையை பரிசோதனை செய்தனர். ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள தபால் நிலையமும் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து வெளியே சென்ற பஸ்களிலும், வெளி மாவட்டத்தில் இருந்து ஈரோட்டுக்கு வந்த பஸ்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதேபோல் பயணிகள் பஸ்சில் ஏறும்போதும், இறங்கும்போதும் தங்களது கைகளை கழுவ வலியுறுத்தப்பட்டது. ஈரோடு பஸ் நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ள தண்ணீர் தொட்டியில் பயணிகள் அனைவரும் தங்களது கைகளை சுத்தம் செய்தனர். ஈரோட்டில் 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன.

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று வழக்கத்தைவிட பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பெரும்பாலான லாரிகள் ஓடாததால் ஈரோடு காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைவாக இருந்தது. இதன் கரணமாக அனைத்து காய்கறிகளின் விலையும் நேற்று உயர்ந்தது. எனினும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com