முத்தாலம்மன், தில்லையம்மன் கோவில் கும்பாபிஷேகம்

முத்தாலம்மன், தில்லையம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.
முத்தாலம்மன், தில்லையம்மன் கோவில் கும்பாபிஷேகம்
Published on

அரியாங்குப்பம்

முத்தாலம்மன், தில்லையம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.

யாகசாலை பூஜை

கடலூர் மாவட்டம் சிங்கிரிக்குடி பஞ்சாயத்துகுட்பட்ட புதுச்சேரி நல்லவாடு வடக்கு கிராமத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன் மற்றும் தில்லையம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் கோ பூஜை, தன பூஜை உள்ளிட்ட பூஜைகளுடன் தொடங்கியது.

10-ந் தேதி மாலை 6 மணி அளவில் முதல் கால யாக பூஜைகள் நடந்தது. 11-ந் தேதி காலை 2-ம் கால யாக பூஜைகளும், மாலை 3-ம் கால யாக பூஜைகளும் நடந்தன.

கும்பாபிஷேகம்

இதையடுத்து இன்று காலை 6 மணி அளவில் 4-ம் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு காலை 10 மணிக்கு கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து தில்லை அம்மன், முத்தாலம்மன், விநாயகர், முருகர், துர்க்கை, நவக்கிரகம் உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவில் சபாநாயகர் செல்வம், முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ், முன்னாள் எம்.பி ராமதாஸ், பாஸ்கர் எம்.எல்.ஏ., முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், தமிழ்நாடு-புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு

கும்பாபிஷேகத்தில் புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி போலீசார் மற்றும் புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் போலீசார் என 2 போலீஸ் நிலையங்களில் இருந்து ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் இரவில் அம்மன் வீதி உலா நடந்தது.

விழா ஏற்பாடுகளை வடக்கு நல்லவாடு கிராம பஞ்சாயத்து தலைவர் சண்முகம், துணைத்தலைவர் ரவி, செயலாளர் சந்திரன், பொருளாளர் பழனிவேல், துணை பொருளாளர் செந்தமிழன் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com