கொடைக்கானலில் வெளிமாநில வாலிபர்களை குறிவைத்து போதை காளான் விற்பனை

கொடைக்கானல் பகுதியில் வெளிமாநில வாலிபர்களை குறிவைத்து போதை காளான் விற்பனை செய்யப்படுவதால், அதனை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானலில் வெளிமாநில வாலிபர்களை குறிவைத்து போதை காளான் விற்பனை
Published on

கொடைக்கானல்,

மலைகளின் இளவரசி என வர்ணிக்கப்படும் கொடைக்கானலுக்கு ஆண்டு தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக சீசன் மற்றும் கோடைகாலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இந்தநிலையில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து சிலர் போதை காளான் விற்பனையில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சமீப காலமாக கொடைக்கானல் பகுதியில் போதை காளான் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

வனப்பகுதிகளில் கிடைக் கும் இந்த வகையான காளான்களை சிலர் சேகரித்து சுற்றுலா பயணிகளிடம் விற்பனை செய்கின்றனர். 2 காளான்கள் ரூ.100 முதல் ரூ.1,000 வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அதிக லாபம் கிடைப்பதால் பலரும் இதனை விற்பனை செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்த வகை காளான்களை ஆம்லெட்டுகளுடன் சேர்த்து, சில கடைகளில் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தவகை காளான்களை தேன் மற்றும் பல உணவு பொருட்களில் கலந்து சாப்பிடுகின்றனர். இதனால் வாலிபர்கள் போதை காளான்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் வாலிபர்கள் கொடைக்கானலுக்கு வந்து இந்த காளான்களை வாங்கி செல்வதாக கூறப்படுகிறது.

கொடைக்கானல் ஏரிச்சாலை உள்பட முக்கிய இடங்களில் வெளிமாநில சுற்றுலா பயணிகளை குறிவைத்து சில கும்பல் போதை காளான்களை விற்பனை செய்கின்றனர். இந்த விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதை காளான் விற்பனை செய்பவர்களை போலீசார் பிடித்தால், அவர்கள் மீது கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதன் காரணமாக அவற்றை விற்பனை செய்பவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து, மீண்டும் போதை காளான் வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர்.

அதிக நேரம் போதை இருப்பதால் இவ்வகை காளானை விரும்பி சாப்பிடுவதாக இளைஞர்கள் கூறுகின்றனர். நகர் பகுதியில் போலீசார் ரோந்து தீவிரமாக இருப்பதால், கிராமங்களில் பதுங்கி இருந்து போதை காளான் விற்பனையில் சிலர் ஈடுபடுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் போதை காளான் விற்பனையை தடுப்பதற்கு என்று தனிச்சட்டம் தேவை என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் வனப்பகுதிக்குள் சென்று போதை காளான் சேகரிப்பவர்கனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com