

கோட்டுச்சேரி
காரைக்கால் நிரவியில் உள்ள இந்திய கடலோர காவல் படை முகாமில் எந்திரவியல் பிரிவு அதிகாரியாக வேலை பார்ப்பவர் சீரா சுரேஷ் (வயது 27). இவர் பணி முடிந்து தான் தங்கியிருக்கும் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவருடன் தபண்குமார் (31) என்ற அதிகாரியும் சென்றார். திரு-பட்டினம் போலகம் அருகில் சென்றுகொண்டிருந்தபோது, நாகையில் இருந்து வந்த தமிழ்நாடு அரசு பஸ், மோட்டார் சைக்கிளின் பின்பக்கம் மோதியது. இதில் நிலை தடுமாறிய சீராசுரேஷ், தபண்குமார் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அவர்கள் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். விபத்து குறித்து அரசு பஸ் டிரைவர் மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தலை சேர்ந்த அருணாசலம் (41) மீது காரைக்கால் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.