போச்சம்பள்ளி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி

போச்சம்பள்ளி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியானார். இதையடுத்து சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போச்சம்பள்ளி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி
Published on

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ள மேட்டு சூலகரையைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். விவசாயி. இவரது மனைவி இளமதி (வயது 30). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் போச்சம்பள்ளி-கல்லாவி சாலையில் தனியார் பள்ளி அருகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி டிரைவர் ஹாரன் அடித்ததால் புஷ்பராஜ் மோட்டார்சைக்கிளை திருப்ப முயன்றார்.

இதில் நிலைதடுமாறி சாலை விரிவாக்க பணிக்காக இருபுறமும் தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் புஷ்பராஜ் சாலையோர பள்ளத்தில் விழுந்தார். இளமதி நடுரோட்டில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி சக்கரத்தில் சிக்கி இளமதி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து தொடர்பாக போச்சம்பள்ளி போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் சாலை பணிகள் மிகவும் தாமதமாக நடப்பதாகவும், சாலையின் இருபுறமும் குழி தோண்டப்பட்டு இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்க நேரிடுவதாகவும், சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் பொதுமக்கள் நேற்று கல்லாவி-போச்சம்பள்ளி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் போச்சம்பள்ளி போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com