திருப்பரங்குன்றம் அருகே தலையில் கல்லைப் போட்டு வாலிபர் கொலை

திருப்பரங்குன்றம் அருகே தலையில் கல்லைப் போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் அருகே தலையில் கல்லைப் போட்டு வாலிபர் கொலை
Published on

திருப்பரங்குன்றம்,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள காடுபட்டியை சேர்ந்தவர் அழகுபாண்டி (வயது 35). இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். அழகுபாண்டி கப்பலூரில் உள்ள தனியார் அச்சகத்தில் வேலை செய்து வந்தார். இதனால் அவர் குடும்பத்துடன் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூரில் உறவினர் வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் தோப்பூர் கண்மாய்க்குள் குப்பைக் கிடங்கு அருகே நேற்று அழகுபாண்டி தலையில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், அழகுபாண்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அழகுபாண்டி தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவர் பிணமாக கிடந்த இடத்தின் அருகில் மதுபாட்டில் கிடந்துள்ளது. இதனால் மது குடித்த போது ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அழகுபாண்டி கொலை செய்யப்பட காரணம் என்ன, முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும், கொலை செய்த நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com