குடியாத்தத்தில் பெண் அதிகாரியிடம் 9 பவுன் தாலி செயின் பறிப்பு

குடியாத்தத்தில் பெண் அதிகாரியிடம் 9 பவுன் தாலி செயினை பறித்துச்சென்ற மர்ம நபர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
குடியாத்தத்தில் பெண் அதிகாரியிடம் 9 பவுன் தாலி செயின் பறிப்பு
Published on

குடியாத்தம், ஜூலை.31-

தாலி செயின் பறிப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காமாட்சியம்மன் கார்டன் 4-வது தெருவை சேர்ந்தவர் சேகர். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி சச்சு (வயது 55). செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை பணிமுடிந்ததும் ஊருக்கு வந்த அவர் இரவு சுமார் 8.30 மணி அளவில் குடியாத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 2 மர்ம நபர்கள், சச்சுவை உரசியபடி வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த இருந்த தாலி செயினை பறித்துள்ளனர். சுதாரித்துக்கொண்ட சச்சு செயினை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். இதனால் மாங்கல்யம் மட்டும் சச்சுகையில் சிக்கியத். 9 பவுன் செயின் மர்மநபர்கள் கையில் சிக்கியது.

2 பேருக்கு வலைவீச்சு

மேலும் திருடன் திருடன் என கூச்சல் போடவே அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனையடுத்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com