ஆட்டோ டிரைவரின் பணத்தாசையால் காம பசிக்கு இரையான வங்கி பெண் ஊழியர்

ஆட்டோ டிரைவரின் பணத்தாசையால் வங்கி பெண் ஊழியர் காம பசிக்கு இரையாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசாரிடம் கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆட்டோ டிரைவரின் பணத்தாசையால் காம பசிக்கு இரையான வங்கி பெண் ஊழியர்
Published on

கும்பகோணம்,

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கியில் வேலை கிடைத்தது. அந்த பெண் தனது பணி தொடர்பாக பயிற்சி பெறுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் இருந்து தஞ்சை மாவட்டம் கும்பகோணத்துக்கு ரெயிலில் வந்தார். கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இருந்து தான் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏறினார்.

அந்த ஆட்டோ குறிப்பிட்ட இடத்துக்கு செல்லாமல் வேறு பாதையில் சென்றது. இதனால் பதற்றம் அடைந்த அந்த பெண் கூச்சல் போட்டுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை, ஆட்டோ டிரைவர் கும்பகோணம் அருகே உள்ள செட்டிமண்டபம் பைபாஸ் சாலை பகுதியில் இறக்கி விட்டு விட்டு சென்று விட்டார். அப்போது நள்ளிரவு நேரம் என்பதால் அங்கு ஆள் நடமாட்டம் இல்லை. இதனால் பரிதவித்த அந்த பெண்ணை அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் சிலர் கடத்தி சென்று தங்களுடைய காம பசிக்கு இரையாக்கி கொண்டனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், செட்டிமண்டபம் அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்த தினேஷ்(வயது 24), மோதிலால் தெருவை சேர்ந்த வசந்த்(21), செட்டிமண்டபம் மூப்பனார் நகரை சேர்ந்த புருஷோத்தமன்(19), செட்டிமண்டபம் அலிமா நகரை சேர்ந்த அன்பரசு(19) ஆகியோர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து தினேஷ், வசந்த், புருஷோத்தமன், அன்பரசு ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இருந்து அழைத்து சென்ற ஆட்டோ டிரைவர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அந்த பெண்ணை விட்டு சென்றதால் தான் இந்த விபரீத சம்பவம் ஏற்பட்டிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள 4 பேருக்கும், பெண்ணை நடுவழியில் தவிக்க விட்டு சென்ற ஆட்டோ டிரைவருக்கும் தொடர்பு இருக்குமோ? என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவரை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், கும்பகோணம் அருகே உள்ள திருப்பணிப்பேட்டை பகுதியை சேரந்த நாகராஜ் மகன் குருமூர்த்தி(25) என்பவர் தான் அந்த ஆட்டோ டிரைவர் என்பது தெரிய வந்தது. அவரைப்பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பவத்தன்று வங்கி பெண் ஊழியரை ஆட்டோவில் அழைத்து சென்றதை குருமூர்த்தி ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கும்பகோணம் மேற்கு போலீசார் நேற்று கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் ஆட்டோ டிரைவரின் பணத்தாசையால் வங்கி பெண் ஊழியர் 4 பேரின் காம பசிக்கு இரையானார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து கைதான குருமூர்த்தி, போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்கு மூலம் வருமாறு:-

சம்பவத்தன்று கும்பகோணத்துக்கு ஒருவரை சவாரிக்கு அழைத்து வந்து விட்டு விட்டு, சொந்த ஊரான திருப்பணிப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தேன். ரெயில் நிலையத்தில் இருந்து பெண் ஒருவர் எனது ஆட்டோவை நிறுத்தினார். அவர் ஆங்கிலத்தில் பேசினார். பார்ப்பதற்கு வசதியான பெண் போல தெரிந்ததால், அவரிடம் அதிக அளவு பணத்தை கட்டணமாக வசூலிக்கலாம் என்ற ஆசை ஏற்பட்டது.

அதன்படி அவரை எனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அவர் கூறிய முகவரிக்கு சம்பந்தமில்லாத செட்டிமண்டபம் பாதையில் சென்றேன். அப்போது அந்த பெண், நான் தவறான பாதையில் செல்வதை செல்போனில் உள்ள மேப் முலம் கண்டுபிடித்து விட்டார். இதனால் என்னை ஆங்கிலத்தில் திட்டினார்.

அவர் பேசிய மொழி எனக்கு சரிவர புரியவில்லை. அவர் போலீசில் மாட்டி விட்டு விடுவாரோ என்ற பயத்தில் செட்டிமண்டபம் பைபாஸ் சாலையில் நடுவழியில் ஆள்நட மாட்டம் இல்லாத பகுதியில் இறக்கி விட்டு விட்டு வேகமாக எனது சொந்த ஊரான திருப்பணிப்பேட்டைக்கு சென்று விட்டேன்.

இதுகுறுத்து நான் யாரிடமும் எதுவும் கூறவில்லை. பின்னர் நடந்த சம்பவங்களை நாளிதழ்களில் வந்த செய்தியை பார்த்து தெரிந்து கொண்டேன். போலீசார் என்னை தேடுவதும் தெரிய வந்தது.

இதனால் ஆட்டோவின் தோற்றத்தை மாற்றி என்னை யாரும் கண்டுபிடித்துவிட முடியாது என நினைத்தேன். ஆனால் போலீசார் என்னை கண்டுபிடித்துவிட்டார்கள். பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள 4 பேருக்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com