

திருத்தணி,
திருத்தணி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் தொடர்ந்து மோட்டா சைக்கிள்கள் திருட்டு போவதாக திருத்தணி போலீஸ் நிலையத்திற்கு புகார்கள் வந்தது. போலீசார் அந்த புகார்களை பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார்கள். இதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி உத்தரவின் பேரில் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசந்தர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் விநாயகம். சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்தர் ஆகியோர் தலைமையில் சிறப்பு காவல் படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தார்கள்.
இந்த நிலையில் அவர்கள் திருத்தணி-சித்தூர் சாலை-பைபாஸ் சாலை சந்திப்பு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த வாலிபரை பிடித்து விசாரித்தார்கள்.
கைது
விசாரணையில் அவர் பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்களை திருடியவர் என்பது தெரிந்தது. மேலும் அந்த வாலிபரின் பெயர் கார்த்திக் (வயது 24 ) என்பதும் திருத்தணியை அடுத்த சூர்யநகரத்தில் உள்ள தெக்களூர் காலனி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது.
இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து அவர் அளித்த தகவலின் பேரில் தெக்களூரில் அவரது வீட்டின் பின்புறம் மறைத்து வைத்திருந்த 11 மோட்டார் சைக்கிள்கள், கனகம்மாசத்திரத்தில் இருந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் என மொத்தம் 12 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.