

சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் ஏ.டி.எம். எந்திரம் ஒரு வருடமாக செயல்படாததால் பொதுமக்கள் அதற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
ஏ.டி.எம். எந்திரம்
சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பஸ் நிலையம் அருகே தேசிய வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் வளாகத்திலேயே ஏ.டி.எம். எந்திரம் உள்ளது. பணம் போடவும், எடுக்கவும் தனித்தனியாக எந்திரங்கள் உள்ளன.
கடந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் தொடங்கியதில் இருந்து இந்த ஏ.டிஎம். எந்திரத்தில் பணம் கட்ட முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வங்கியில் வரிசையில் நின்று பணம் கட்டி வந்தார்கள். மேலும் நேர விரயம் ஆவதாக கூறி வேதனைப்பட்டார்கள். வங்கி விடுமுறை நாட்களில் பணம் கட்ட முடியாமல் அவதிப்பட்டார்கள்.
கண்ணீர் அஞ்சலி
இந்த நிலையில் சத்தியமங்கலம் நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ஸ்டாலின் சிவக்குமார், அரியப்பம்பாளையம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் மாணிக்கம் மற்றும் சுந்தரம், பொதுமக்கள் சிலர் நேற்று காலை 10 மணி அளவில் பயன்படாமல் இருந்த ஏ.டி.எம். எந்திரத்துக்கு சென்றார்கள்.
பின்னர் அதற்கு பொட்டு வைத்து, மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். பதாகையில் கண்ணீர் அஞ்சலி என்று எழுதி கையிலும் வைத்திருந்தார்கள். இந்த சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.