மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியது

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டி உள்ளது.
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியது
Published on

மும்பை,

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 4-ல் ஒரு பங்கினர் மராட்டியத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இதேபோல வைரஸ் நோய்க்கு பலியானவர்களில் சுமார் 35 சதவீதம் பேர் நமது மாநிலத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று மாநிலத்தில் 24 ஆயிரத்து 886 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதிய உச்சமாக மாநிலத்தில் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி உள்ளது. இதுவரை 10 லட்சத்து 15 ஆயிரத்து 681 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 நாளில் மட்டும் மாநிலத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

393 பேர் பலி

இதேபோல மாநிலத்தில் புதிதாக 393 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை மராட்டியத்தில் 28 ஆயிரத்து 724 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர்.

மாநிலத்தில் இதுவரை 7 லட்சத்து 15 ஆயிரத்து 23 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 2 லட்சத்து 71 ஆயிரத்து 566 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாக்பூரில் 43 பேர் பலி

மாநிலத்தில் அதிகபட்சமாக புனே மாநகராட்சியில் நேற்று 2 ஆயிரத்து 367 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அங்கு 29 பேர் பலியாகி உள்ளனர். இதேபோல புனே புறநகரில் 1,555 பேருக்கும் (22 பேர் பலி), பிம்பிரி சிஞ்வட்டில் 1,286 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாக்பூரில் மேலும் 43 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். அங்கு நேற்று மட்டும் 1,807 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை

தலைநகர் மும்பையில் ஊரடங்கில் ஏற்படுத்தப்பட்ட தளர்வு மற்றும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதில் 2-வது நாளாக நேற்றும் நகரில் பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நகரில் புதிதாக 2 ஆயிரத்து 191 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை மும்பையில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 306 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 78 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 27 ஆயிரத்து 626 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பையில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 58 நாட்களாக உள்ளது. தற்போது நகரில் 7 ஆயிரத்து 217 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 542 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com