கொடைக்கானலில் இடி-மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை

கொடைக்கானலில் இடி-மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கொடைக்கானலில் இடி-மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை
Published on

கொடைக்கானல்:
கொடைக்கானலில் இடி-மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் தற்போது கோடைகாலம் நிலவி வருகிறது. அத்துடன் குளுகுளு சீசன் தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்குநாள் அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். குறிப்பாக கல்லூரி மாணவ-மாணவிகள் வருகை அதிக அளவில் இருந்தது.
இதனால் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, பைன்மரக்காடு, பில்லர்ராக், மோயர் பாயிண்ட் உள்ளிட்ட சுற்றுலா இடங்களிலும், வெள்ளி நீர்வீழ்ச்சி, தேவதை அருவி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளிலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதேபோல் ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும், நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.
இடி-மின்னலுடன் கனமழை
கொடைக்கானலில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக இருந்தது. இந்தநிலையில் நண்பகல் 12 மணி அளவில் கருமேகங்கள் திரண்டு மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. பின்னர் சிறிது நேரத்தில் கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் மழை பெய்ய தொடங்கியது. அதன்பிறகு இடி-மின்னலுடன் கனமழையாக கொட்டித்தீர்த்தது.
12.30 மணிக்கு தொடங்கிய கனமழை, மாலை 4.30 மணி வரை விடாமல் பெய்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. குறிப்பாக ஏரிச்சாலையில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அந்த சாலையில் சென்ற வாகனங்கள் மழைநீரில் ஊர்ந்து சென்றன.
பலத்த மழையால் கொடைக்கானலை ஒட்டியுள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, தேவதை அருவி, பியர்சோழா அருவி, பாம்பார் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக வெள்ளி நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
நட்சத்திர ஏரி
இந்த திடீர் மழையால் சுற்றுலா பயணிகள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் ஏரிச்சாலையில் ஒதுங்குவதற்கு இடமின்றி மழையில் நனைந்தவாறே தங்களது வாகனங்களுக்கும், அறைகளுக்கும் திரும்பினர். மழையை தொடர்ந்து மாலையில் குளிர் நிலவியது. கனமழை காரணமாக நட்சத்திர ஏரி மீண்டும் நிரம்பி வழியும் சூழ்நிலையில் உள்ளது. அத்துடன் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மழையால் வனப்பகுதிகளில் ஏற்பட்டு வந்த தீ விபத்துகளுக்கு தீர்வு ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com