திருவாரூர் மாவட்டத்தில் 13,579 மாணவ-மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர்

திருவாரூர் மாவட்டத்தில் 13,579 மாணவ-மாணவிகள் பிளஸ்-1 தேர்வினை எழுதினர்.
திருவாரூர் மாவட்டத்தில் 13,579 மாணவ-மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர்
Published on

திருவாரூர்,

தமிழகம் முழுவதும் பிளஸ்-1 தேர்வு நேற்று தொடங்கியது. திருவாரூர் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 463 மாணவர்கள், 7,943 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 406 பேர் தேர்வு எழுத இருந்தனர். நேற்று முதல் தேர்வான தமிழ் தேர்வினை 13 ஆயிரத்து 579 மாணவர்கள் எழுதினர். 827 மாணவர்கள் தேர்வு எழுதவரவில்லை.

தேர்வு மையத்தில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்களை கண்காணிக்க பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களை கொண்ட 6 சிறப்பு பறக்கும்படை, 940 அறைக்கண்காணிப்பாளர்கள், 15 வழித்தட அலுவலர்கள், 53 முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் 84 நிலையான படை, மாற்றுத்திறனுடைய மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு 48 சொல்வதை எழுதுபவர்கள் அமைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மையங்களுக்கு வந்து செல்ல போதுமான அளவில் பஸ் வசதி மற்றும் தேர்வு நடைபெறும் நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் தயார் நிலையில் இருக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் திருவாரூர் அருகே உள்ள புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த பிளஸ்-1 தேர்வினை கலெக்டர் ஆனந்த் நேரில் பார்வையிட்டார். அப்போது உதவி கலெக்டர் முருகதாஸ் உள்பட கல்வித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com