கொச்சி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர் மாயம்

கொச்சி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர் மாயமானார். அவரை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை கோரிக்கை விடுத்துள்ளது.
கொச்சி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர் மாயம்
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சேசய்யன் (வயது 69). இவரும், தூத்தூரை சேர்ந்த 3 பேர், நாகை மற்றும் கடலூரை சேர்ந்த 8 பேர் என மொத்தம் 12 மீனவர்கள் நேற்று முன்தினம் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று அதிகாலையில் மீன்பிடித்து கொண்டிருந்த போது சக மீனவர்கள் சேசய்யனை படகில் தேடி பார்த்த போது அவரை காணவில்லை. படகு முழுவதும் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் கடலில் தவறி விழுந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதையடுத்து சக மீனவர்கள், சேசய்யனை கடலில் தேடினர். நீண்ட நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அரசுக்கு கோரிக்கை

இதுகுறித்து மீனவரின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த உறவினர்கள் கதறி அழுதனர்.இதற்கிடையே மாயமான மீனவரை கடல் வழியும், வான் வழியும் தேட வேண்டும் என சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆண்டனி, பிரதமர் மோடி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர் மாயமான சம்பவம் மீனவ கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com