

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமந்தமலை அருகே உள்ள குட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 32). இவரிடம், பர்கூர் தாலுகா சிந்தகம்பள்ளி அம்பேத்கர் காலனியை சேர்ந்த அன்பு (52) என்பவர், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் கூறியபடி அவர் வேலை வாங்கி கொடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் விஜயகுமார் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டார். அப்போது அன்பு, பணத்தை திருப்பி கொடுக்க மறுத்ததுடன் அவருக்கு மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து விஜயகுமார், கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையத் பாஷா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில், அன்பு பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.93 லட்சத்து 85 ஆயிரம் வரை பெற்று மோசடி செய்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அன்புவை போலீசார் கைது செய்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.