

கடத்தூர்
மதுவில் கலக்க தண்ணீர் தர மறுத்த தகராறில், தொழிலாளியை பாட்டிலால் தாக்கியவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மது குடித்தனர்...
கோபி நாய்க்கன்காட்டை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 40). கூலி தொழிலாளி. இவர் நாய்க்கன்காடு குப்பைகிடங்கு அருகில் உள்ள ஒரு டாஸ்மாக்கடையில் மதுவாங்கி அந்த பகுதியில் அமர்ந்து குடித்துக்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு அருகே கோபி புதுப்பாளையத்தை சேர்ந்த தொழிலாளி முருகன் (54) என்பவரும் மது அருந்திக்கொண்டு இருந்தார்.
இந்தநிலையில் தர்மராஜா முருகனிடம் மதுவில் கலப்பதற்காக தண்ணீர் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு முருகன் தர மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார்கள்.
பாட்டிலால் தாக்குதல்
தகராறு முற்றியதில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த முருகன் மதுபாட்டிலால் தர்மராஜின் தலையில் அடித்ததாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த தர்மராஜ் வலியால் அலறி துடித்தார். உடனே முருகன் அங்கிருந்து ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து படுகாயமடைந்து துடித்த தர்மராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்சை வரவழைத்து கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்கள். அங்கு தர்மராஜூக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முருகனை வலைவீசி தேடி வருகிறார்கள்.