பிராட்வே பஸ் நிலையம் அருகே ஐகோர்ட்டுக்கு அரசு வழங்கிய 3.34 ஏக்கர் நிலம் நீதிபதிகள் ஆய்வு

சென்னை ஐகோர்ட்டு நிர்வாகத்திடம் இந்த நிலத்தை வழங்க சென்னை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
பிராட்வே பஸ் நிலையம் அருகே ஐகோர்ட்டுக்கு அரசு வழங்கிய 3.34 ஏக்கர் நிலம் நீதிபதிகள் ஆய்வு
Published on

சென்னை,

சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகே 3.34 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை பச்சையப்பன் அறக்கட்டளை குத்தகைக்கு எடுத்திருந்தது. இந்த ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டது. இதையடுத்து இந்த நிலத்தை ஐகோர்ட்டு பயன்பாட்டுக்கு வழங்க முடிவு செய்து கடந்த 17-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு நிர்வாகத்திடம் இந்த நிலத்தை வழங்க சென்னை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த நிலம் ஐகோர்ட்டு கட்டுப்பாட்டில் வந்துள்ளதால், இங்கு ஐகோர்ட்டின் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்காக தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி மற்றும் நீதிபதிகள் ஆர்.சுப்பையா, என்.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ், பாரதிதாசன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர் இதுகுறித்து நிருபர்களிடம் சென்னை ஐகோர்ட்டு நிர்வாக பதிவாளர் இந்துமதி கூறும்போது, சென்னை ஐகோர்ட்டில் போதிய இடவசதி இல்லாததால், ஐகோர்ட்டு அருகே இடம் ஒதுக்க அரசிடம் கேட்டோம். தற்போது இந்த 3.34 ஏக்கர் இடத்தை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இந்த இடத்தில் கட்டுமானங்கள் மேற்கொள்வது குறித்து மற்ற நீதிபதிகளிடம் ஆலோசித்த பின் தலைமை நீதிபதி அறிவிப்பார் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com