

அலங்காநல்லூர்,
மதுரையை அடுத்த சிட்டம்பட்டியில் இருந்து வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி வரை நான்குவழிச்சாலை அமைப்பட முடிவு செய்யப்பட்டது. தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 32 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட உள்ள நான்குவழிச்சாலைக்காக, இந்த வழியில் உள்ள இருபோக விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் நிலை உருவாகி உள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து பென்னிகுவிக் இருபோக பாசன விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் நான்குவழிச்சாலையை மாற்றுப்பாதையில் அமைக்க வலியுறுத்தி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்தநிலையல் அலங்காநல்லூரை அடுத்த பண்ணைகுடி கிராம பொதுமக்கள், இந்த பகுதியில் உள்ள இருபோக சாகுபடி விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்தும், இதை அரசுக்கு கண்டனமாக தெரிவிக்கும் வகையில் வீடுகள், வீதிகள் மற்றும் கடைகளில் கருப்பு கொடியை கட்டி தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த பகுதியில் தற்போது முதல் போக பெரியாறு பாசன சாகுபடிக்கான விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.