பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய தொழில் பூங்கா அறிவிப்பு வரவேற்கத்தக்கது

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய தொழில் பூங்கா அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய தொழில் பூங்கா அறிவிப்பு வரவேற்கத்தக்கது
Published on

பெரம்பலூர்:

தமிழக அரசின் பட்ஜெட் குறித்து பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு;-

மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்

பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ரேஷ்மா:-

தமிழக அரசின் பட்ஜெட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் தலா ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்ற திட்டம் வரவேற்கத்தக்கது. இந்த திட்டம் ஏழை மாணவிகள் உயர்கல்வி படிக்க மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். உயர்கல்வியில் தேவையான பாட புத்தகங்கள் உள்ளிட்டவை வாங்க இந்த தொகை உதவியாக இருக்கும்.

துறைமங்கலம் புதுக்காலனியை சேர்ந்த பார்த்தசாரதி:-தேர்தல் வாக்குறுதியாக அளித்த குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்த இருந்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. பரம்பலூர் மாவட்டத்தில் புதிய முதலீடுகளை ஈர்க்க தொழில் பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மாவட்டந்தோறும் புத்தக கண்காட்சி நடைபெறும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது, என்றார்.

தொழில் பூங்கா

வேப்பந்தட்டையை அடுத்துள்ள பில்லங்குளத்தை சேர்ந்த சுப்ரமணியன்:-

தனியார் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் இலவச பாடப்புத்தகம் வழங்கப்படும் என்ற அறிவிப்பும், உயர்கல்வி பயில மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது. இதனால் வருங்காலங்களில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து, பள்ளிகளின் தரம் உயரும் என்பதில் சந்தேகமில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்பதும் வரவேற்கத்தக்கது.

குன்னம் வட்டம் ஒதியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ந.மணிவண்ணன்:-

பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.36 ஆயிரம் கோடி ஒதுக்கி இருப்பது வரவேற்கத்தக்கது. முன்மாதிரி பள்ளிகளை 15 மாவட்டங்களில் தொடங்குவது மாணவர்களின் கல்வி திறனை அதிகரிக்கும். திறன்மிகு வகுப்பறைகள் (ஸ்மார்ட் கிளாஸ்) தொடங்க உள்ளது கிராமப்புற மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். புதிய கட்டிடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து இருப்பது கல்வித்துறையை மேம்படுத்த மிகவும் பயனுள்ளதாக அமையும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com