

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் இளவரசனின் மனைவி மலர்கொடி. இவரது வீட்டில் பசு மாடு ஒன்றை வளர்த்து வந்தார். அந்த பசு கன்று ஈன்று ஒரு மாதம் ஆகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டு தோட்டத்தில் உள்ள கொட்டகையில் பசுமாட்டை கட்டி வைத்திருந்தனர். அப்போது திடீரென பசு கத்தும் சத்தம் கேட்டு, வீட்டில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது அந்த பசு கால்களால், கட்டு விரியன் பாம்பை மிதித்துக் கொண்டு இருந்தது. பசு மிதித்ததில் அந்த பாம்பு அதே இடத்தில் செத்தது.
இதையடுத்து பசுவை பார்த்தபோது பசுவின் காலிலும், வயிறு பகுதியிலும் பாம்பு கடித்ததற்கான தடம் தெரிந்தது. இது பற்றி உடனடியாக கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்து, பசுவை காப்பாற்ற சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று கால்நடை பராமரிப்பு ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில், ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினரும் அங்கு வந்து பசுமாட்டிற்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அந்த பசு மாடு நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. கன்று ஈன்று ஒரு மாதமே ஆன நிலையில் பாம்பு கடித்து பசு இறந்த சம்பவம் மலர்கொடி குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.