கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்

கூடலூர் அருகே காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்தது.
கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்
Published on

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களாக செம்பாலா தனியார் தேயிலை தோட்டங்களில் குட்டிகளுடன் 9 காட்டுயானைகள் முகாமிட்டு இருந்தன. அவை நேற்று அதிகாலை 2 மணிக்கு கூடலூர் வ.உ.சி. நகருக்குள் புகுந்தன.

தொடர்ந்து வீடுகளின் முன்பு இருந்த தென்னை உள்ளிட்ட மரங்களை முறித்து தின்றன. சத்தம் கேட்டு மக்கள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது காட்டுயானைகள் முகாமிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் வீடுகளில் பீதியுடன் பதுங்கி இருந்தனர். சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு அங்கிருந்து ராக்லேண்ட் தெருவுக்கு காட்டுயானைகள் நுழைந்தன. அங்கு ஒரு வீட்டின் கழிப்பறை கட்டிடத்தை உடைத்தன. பின்னர் அருகில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்துக்குள் காட்டுயானைகள் சென்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த வனச்சரகர் கணேசன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் காட்டுயானைகளை கெவிப்பாரா வழியாக கோக்கால் மலையடிவாரத்துக்கு விரட்டியடித்தனர்.

இதேபோன்று கூடலூர் அருகே செளுக்காடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு காட்டுயானை ஒன்று புகுந்தது. பின்னர் முகம்மது என்பவரது கடையை உடைத்து உணவு பொருட்களை தின்றது. அதனை வனத்துறையினர் விரட்டினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com