

திசையன்விளை:
திசையன்விளை அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தனியார் நிறுவன ஊழியர்
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இடையன்குடி செக்கடி தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மகன் சுதாகர் (வயது 27). இவர் கோவையில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார்.
நேற்று மதியம் சுதாகர் தன்னுடைய நண்பர்கள் 3 பேருடன் திசையன்விளை- இடையன்குடி ரோடு பள்ளிக்கூடம் அருகில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். சுமார் 90 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 70 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்தது. அந்த கிணற்றில் குளித்தபோது எதிர்பாராதவிதமாக சுதாகர் தண்ணீரில் மூழ்கினார்.
உடல் மீட்பு
இதனைப் பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து, திசையன்விளை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, கிணற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் சுதாகரின் உடலை பிணமாக மீட்டனர்.
அவரது உடலை திசையன்விளை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சுதாகருக்கு 3 சகோதரிகள் உள்ளனர்.