திருப்பத்தூரில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்; கலெக்டர் தகவல்

வேலைவாய்ப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 05.07.2025 சனிக்கிழமை அன்று இஸ்லாமியா ஆண்கள் கல்லூரி வாணியம்பாடியில் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு 5000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யப்படவுள்ளனர். இம்முகாமில் 10ம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ் 2 தேர்ச்சி , பட்டதாரிகள், பட்டயப்படிப்பு, மருத்துவம். ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டம் படித்தவர்கள் என அனைத்து வித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள முற்றிலும் அனுமதி இலவசமானதாகும்.
மேலும் இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் வாயிலாக இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் குறித்த வழிகாட்டுதல்கள் மற்றும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.
மேலும், தனியார்துறையில் பணிபுரிய ஆர்வமுள்ள படித்த இளைஞர்கள் அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும், இம்முகாம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு பதிவு எண் இரத்து செய்யப்படமாட்டாது. இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் https://www.tnprivatejobs.tn.gov என்ற இணையதளத்தில் கல்வி தகுதியை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04179-222033 வாயிலாக அலுவலக நாட்களில் தொடர்பு கொள்ளலாம்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.






