நண்பரை சுட்டு கொன்று நகை-பணம் கொள்ளை: விவசாயிக்கு ஆயுள் தண்டனை

Life sentence for farmer
நண்பரை சுட்டு கொன்று நகை-பணம் கொள்ளை: விவசாயிக்கு ஆயுள் தண்டனை
Published on

சிவமொக்கா:

கொலை-கொள்ளை

சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா வட்டகாரு கிராமத்தை சேர்ந்தவர் புஜங்கா (வயது 43). விவசாயி. இவரது நண்பர் மளலிமக்கி கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (35). இந்த நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந்தேதி புஜங்கா, நாகராஜிக்கு போன் செய்து கெசினமனே வனப்பகுதிக்கு வரும்படி அழைத்துள்ளார்.

அதன்படி நாகராஜும் அங்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அங்கு வைத்து புஜங்கா, தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் நாகராஜை சுட்டார். இதில் குண்டு பாய்ந்து நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து புஜங்கா, அவரிடம் இருந்து நகை, பணத்தை கொள்ளையடித்ததுடன் மோட்டார் சைக்கிளையும் திருடி சென்றுவிட்டார்.

கைது

இதுகுறித்து தீர்த்தஹள்ளி புறநகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் புஜங்கா தான், நாகராஜை வனப்பகுதிக்கு வரவழைத்து கொலை செய்து நகை, பணம், மோட்டார் சைக்கிளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது சிவமொக்கா கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு சிவமொக்கா கோர்ட்டில் நடந்து வந்தது. மேலும், தீர்த்தஹள்ளி போலீசார் புஜங்கா மீது சிவமொக்கா கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி பல்லவி தீர்ப்பு வழங்கினார். அப்போது, புஜங்கா மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com