

ராமநகர்: கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் சாத்தனூர் உள்பட பல்வேறு கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளன. இதனால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதுடன், விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. அவற்றை தடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஊருக்குள் வனவிலங்கு புகாமல் இருக்க கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சாத்தனூர் கிராமத்தில் ஹரிஹரா சோதனை சாவடி அருகே காட்டு யானை ஒன்று நடமாடியது. அந்த யானை, வனத்துறையினர் அமைத்த கம்பி தடுப்பு வேலியை தாண்டி ஊருக்குள் புகுந்தது. யானை வேலியை தாண்டியதை, அந்த பகுதியில் கால்நடைகளை மேய்த்து கொண்டிருந்தவர்கள் தங்கள் செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர். அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.