‘ஒற்றுமை சிலை’ டிக்கெட் விற்பனையில் ரூ.5.24 கோடி மோசடி: போலீஸ் வழக்குப்பதிவு

‘ஒற்றுமை சிலை’ டிக்கெட் விற்பனையில் ரூ.5.24 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
‘ஒற்றுமை சிலை’ டிக்கெட் விற்பனையில் ரூ.5.24 கோடி மோசடி: போலீஸ் வழக்குப்பதிவு
Published on

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டம் கேவடியா பகுதியில், மறைந்த முன்னாள் மத்திய உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேலின் பிரமாண்ட சிலை கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திறந்து வைக்கப்பட்டது. ஒற்றுமை சிலை என்றும் அச்சிலை அழைக்கப்படுகிறது. அது பெரிய சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது.

அங்கு டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் பணம், வடோதராவில் உள்ள ஒரு தனியார் வங்கியில் சிலை நிர்வாகம் பெயரிலான வங்கிக்கணக்கில் போடப்பட்டு வருகிறது. அந்த வசூல் பணத்தை வாங்கி வந்து டெபாசிட் செய்வதற்காக ஒரு தனியார் ஏஜென்சியை வங்கி ஏற்பாடு செய்திருந்தது.

கடந்த ஒன்றரை ஆண்டாக டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த பெரும் தொகையை தனியார் ஏஜென்சி ஊழியர்களிடம் சிலை நிர்வாகம் சில வாரங்களுக்கு முன்பு ஒப்படைத்தது.

ஆனால், அந்த ஊழியர்களில் சிலர், அப்பணத்தின் ஒரு பகுதியான ரூ.5 கோடியே 24 லட்சத்தை வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யாமல் தாங்களே பதுக்கிக் கொண்டனர். இந்த மோசடியை அறிந்த சிலை நிர்வாகம், வங்கியிடம் முறையிட்டது. அதன்பேரில், ஏஜென்சி ஊழியர்கள் மீது வங்கி மேலாளர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இதற்கிடையே, மோசடி செய்யப்பட்ட ரூ.5 கோடியே 24 லட்சத்தை வங்கியே தங்களது கணக்கில் செலுத்தி விட்டதாக சிலை நிர்வாகம் நேற்று தெரிவித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com