

ஜம்மு,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை முற்றுகையிட்ட பாதுகாப்பு படையினர், அவர்களை நோக்கி சரமாரி தாக்குதல்களை நடத்தினர்.
சிலமணி நேரங்கள் நீடித்த இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச்சேர்ந்தவன் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்பகுதியில் மேலும், ஒரு பயங்கரவாதி பதுங்கியிருப்பதாக நம்பப்படுவதால் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.