

அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. அதைத்தொடர்ந்து, நேற்றுமுன்தினம் நாடாளுமன்ற மக்களவையில் அம்மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 323 உறுப்பினர்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது.
இதையடுத்து, நேற்று மாநிலங்களவையில் இந்த மசோதாவை மத்திய சமூக நீதித்துறை மந்திரி தாவர்சந்த் கெலாட் தாக்கல் செய்தார். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோஷத்துக்கிடையே அவர் தாக்கல் செய்தார். நீண்ட விவாதத்தை தொடர்ந்து, இரவு 10 மணிக்கு மேல், மசோதா மீது ஓட்டெடுப்பு நடைபெற்றது. அதில், 165 உறுப்பினர்களின் ஆதரவுடன் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது. தி.மு.க., ராஷ்டிரீய ஜனதாதளம், பிஜூ ஜனதாதளம் ஆகிய கட்சிகளை சேர்ந்த 7 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
இதன்மூலம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொதுப்பிரிவினர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறி விட்டது. இதையடுத்து, ஜனாதிபதி ஒப்புதலுக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் அளித்த பிறகு சட்ட வடிவம் பெறும். இந்நிலையில் பொதுப்பிரிவினர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பொருளாதார அளவுகோல் இடஒதுக்கீடுக்கான அடிப்படையாக இருக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.