புத்தகம் கொண்டு வராத சிறுமி... வெயிலில் நிற்க வைக்கப்பட்டதால் உயிரிழந்த பரிதாபம்

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அந்த சிறுமி உயிரிழந்தார்.
புத்தகம் கொண்டு வராத சிறுமி... வெயிலில் நிற்க வைக்கப்பட்டதால் உயிரிழந்த பரிதாபம்
சிறுமி
Published on

புதுடெல்லி,

பள்ளிக்கு புத்தகம் கொண்டு வராததற்காக 10 வயது மாணவி ஒருவரை ஆசிரியர் வெயிலில் நிற்க வைத்ததால், அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மயங்கி விழுந்த மாணவி

டெல்லி கிழக்கு வினோத் நகர் பகுதியில் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த 10 வயது சிறுமி, வகுப்பிற்கு புத்தகம் கொண்டு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வகுப்பாசிரியர், அந்த சிறுமியை வகுப்பிற்கு வெளியே வெயிலில் கைகளை தூக்கியபடி நிற்க வைத்து கடுமையான தண்டனை கொடுத்துள்ளார். நீண்ட நேரம் வெயிலில் நின்றதால் உடல்நிலை கடுமையாக மோசமடைந்த அந்த சிறுமி, திடீரென தலைசுற்றி மயங்கி கீழே விழுந்தார்.

சிகிச்சை பலனின்றி மரணம்

சிறுமி மயங்கி விழுந்ததை அடுத்து, பதறியடித்த பள்ளி நிர்வாகத்தினர் அவரது தாயார் அஞ்சலிக்கு அவசரமாக தகவல் கொடுத்தனர். தாய் பள்ளிக்கு ஓடி வந்து பார்த்தபோது, வெயிலில் வாடி வதங்கிய நிலையில் தனது மகள் ஆபத்தான நிலையில் கிடப்பதை கண்டு கதறி அழுதார். உடனே சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

பெற்றோர் போராட்டம்

தங்கள் மகளின் மரணத்திற்கு காரணமான அந்த ஆசிரியரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சிறுமியின் பெற்றோரும், உறவினர்களும், உள்ளூர் பொதுமக்களும் திரண்டு பள்ளிக்கு வெளியே போராட்டத்தில் குதித்தனர். நிலைமை பதற்றமானதை அடுத்து, பா.ஜ.க. எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு வந்து நியாயமான விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தார். சம்பந்தப்பட்ட ஆசிரியர் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் அலட்சியம் இருப்பது உறுதியானால் சம்மந்தப்பட்டவர் மீது சட்டப்படி மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என உத்தரவிட்டுள்ளார்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சிறுமிக்கு ஏற்கனவே வலிப்பு நோய் பாதிப்பு இருந்ததாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் பள்ளி மற்றும் மருத்துவ பதிவுகள் தரப்பில் கூறப்பட்டாலும், உடற்கூராய்வு முடிவு வந்த பிறகே சிறுமியின் மரணத்திற்கான துல்லியமான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் டெல்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com