அமெரிக்காவில் இருந்து 1,080 இந்தியர்கள் நாடு கடத்தல்

நாடு கடத்தப்பட்டவர்களில் 62 சதவீதத்தினர் வர்த்தக விமானங்களில் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர்.
அமெரிக்காவில் இருந்து 1,080 இந்தியர்கள் நாடு கடத்தல்
Published on

புதுடெல்லி,

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று ஜனாதிபதியானார். கடந்த ஜனவரி 20-ந்தேதி இதற்காக நடந்த பதவியேற்பு விழாவில் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்று கொண்டார். அவர் பதவிக்கு வந்ததும் பல உத்தரவுகளை வெளியிட்டார்.

அமெரிக்காவின் எல்லை வழியே சட்டவிரோத வகையில் அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அகதிகளாக புலம்பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை டிரம்ப் எடுத்து வருகிறார்.

இதன்படி, அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை டிரம்ப் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. அவர்களில் இந்தியர்களும் அடங்குவர். இதன்படி, அமெரிக்க ராணுவ விமானம் உதவியுடன் இந்தியாவை சேர்ந்த மக்கள், சொந்த நாட்டுக்கு திருப்பி கொண்டு வரப்பட்டனர்.

இந்நிலையில், டெல்லியில் மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது, புலம்பெயர்ந்தோர் விவகாரங்களில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நெருங்கிய ஒத்துழைப்பு உள்ளது. சட்டவிரோத வகையில் வசிக்கும் அல்லது பயணிக்கும் இந்திய குடிமக்களை நாடு கடத்தும் விவகாரங்களில், அவர்களை பற்றிய விவரங்களை பெற்றதும், நாம் அவர்களை அமெரிக்காவில் இருந்து திரும்ப அழைத்து கொள்கிறோம் என்றார்.

ஜனவரி 2025-ல் இருந்து, 1,080 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டு உள்ளனர். அவர்களில் 62 சதவீதத்தினர் வர்த்தக விமானங்களில் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர் என்றும் பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com