

நாசிக்,
மராட்டியத்தின் நாசிக் நகர் அருகே லஹாவிட் மற்றும் தேவ்லாலி இடையே சென்று கொண்டிருந்த 11061 என்ற எண் கொண்ட எல்.டி.டி-ஜெய்நகர் செல்லும் பவன் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை 15.10 மணியளவில் திடீரென தடம் புரண்டது.
இதில் ரெயிலில் இருந்த சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து புரண்டன. இதனை அடுத்து சம்பவ பகுதிக்கு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவிக்கு ஓடோடி சென்றனர். ரெயில்வே நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, விபத்து நிவாரண ரெயில் மற்றும் மருத்துவ வேன் ஆகியவை சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்றன. இதனை மத்திய ரெயில்வே தெரிவித்து உள்ளது. ரெயில் தடம் புரண்டதற்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவரவில்லை.
இதன்பின், ரெயில் பயணிகளுக்காக பேருந்துகளை ரெயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதுபற்றி மத்திய ரெயில்வே நிர்வாகத்தின் தலைமை பி.ஆர்.ஓ. கூறும்பொது, பவன் எக்ஸ்பிரசின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன. யாரும் உயிரிழக்கவில்லை. தம்பதிகளில் ஒரு சில பேருக்கு காயம் ஏற்பட்டது. உதவி எண் அறிவிக்கப்பட்டு மீட்பு பணிகள் நடந்துள்ளன என கூறியுள்ளார்.
பவன் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 11 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி சென்றுள்ளன. நிவாரண பணிகளுக்காக ரெயில் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், இந்த சம்பவத்தினால் 7 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. 3 ரெயில்கள் திருப்பி விடப்பட்டு உள்ளன. 2 ரெயில்கள் காலதாமதத்துடன் இயக்கப்பட்டன என்று தெரிவித்து உள்ளது.