

போபால்,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்காக மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் 11 வெள்ளிக் செங்கற்கள் அனுப்பப்பட்டதாக மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான கமல்நாத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் மத்தியபிரதேச குடிமக்களின் சார்பாக ராமர் கோவில் கட்டுவதற்காக 11 வெள்ளி செங்கற்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த வெள்ளிச் செங்கற்கள் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் பங்களிப்பின் மூலம் வாங்கப்பட்டன என கூறினார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்த கமல்நாத், கடந்த 1985-ம் ஆண்டு அயோத்தியில் ராம ஜென்ம பூமி தளத்தை மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி திறந்து வைத்ததை நினைவு கூர்ந்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில் இவை எங்கள் உணர்வுகள். நாட்டில் ராமராஜ்ஜியம் வரவேண்டும் என்று ராஜீவ் காந்தி 1989-ல் கூறியிருந்தார். ராஜீவ் காந்தியால்தான் ராமர் கோவிலின் கனவு நனவாகிறது. இப்போது அவர் உயிருடன் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார் என கூறினார்.