

லக்னோ,
பிரதமர் நரேந்திர மோடிக்காக பிருந்தாவன கைம்பெண் தாய்மார்கள் தங்களது கைகளால் 1,100 சிறப்பு ராக்கி கயிறுகளை நெகிழ்ச்சியுடன் தயாரித்துள்ளனர்.
சமூக கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து, சுலப் இன்டர்நேஷனல் என்ற தொண்டு நிறுவனத்தின் ஆதரவோடு மதுராவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோபிநாத் கோவிலில் நேற்று ஒன்று திரண்ட இந்த தாய்மார்கள், கிருஷ்ண பஜனை பாடல்களுக்கு நடனமாடி, மகிழ்ச்சியுடன் இந்த ராக்கிகளை அலங்கரித்து பேக் செய்துள்ளனர்.
தாய்மார்கள் தயாரித்துள்ள இந்த சிறப்பு ராக்கிகளில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவம் பொறித்த புகைப்படங்கள் மிக அழகாக அச்சிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த 1,100 ராக்கிகளுடன் பிருந்தாவனத்தை சேர்ந்த ஐந்து பேர் கொண்ட கைம்பெண் தாய்மார்கள் குழு டெல்லிக்கு சென்று, பிரதமர் மோடியின் இல்லத்தில் அவரது கைகளில் நேரடியாக ராக்கி கட்ட திட்டமிட்டுள்ளனர்.
பிரதமர் மோடியை தங்களது சொந்த சகோதரனாக கருதுவதாகவும், அவர் ஒட்டுமொத்த தேசத்தையும் தங்களை போன்ற தாய்மார்களையும் பாதுகாப்பதாக தங்களது நெஞ்சார்ந்த நம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் 2012-ம் ஆண்டு உத்தரவின்படி, சமூகம் மற்றும் குடும்பத்தினரால் கைவிடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த சுமார் 1,500-க்கும் மேற்பட்ட தாய்மார்களின் நல்வாழ்வையும், பண்டிகை கொண்டாட்டங்களையும் இந்த தொண்டு நிறுவனம் தொடர்ந்து உறுதி செய்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் வரும் ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு இவர்கள் அன்பளிப்புகளை அனுப்புவது வழக்கம்.