

மும்பை
மும்பையில் நேற்று அதிகாலை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. தெருக்களிலும் சாலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பேருந்து, ரெயில், விமானம் என அனைத்து போக்குவரத்து சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் வேறு பகுதிகளுக்குச் செல்ல அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மீட்புப்பணிகளை மராட்டிய அரசு முடுக்கி விட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் மும்பையில் கனமழையால் 5 இடங்களில் ஏற்பட்ட விபத்து சம்பவங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை செம்பூர் பகுதியில் நிலச் சரிவால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். பந்த்அப் என்ற இடத்தில் வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மின்கோளாறு காரணமாக இருவரும் வெள்ளத்தில் சிக்கி முதியவர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக கனமழையால் ஏற்பட்ட விபத்துகளில் ஒரேநாளில் 33 பேர் பலியாகியுள்ளனர்.
நவி மும்பை கார்கர் மலையில் ஞாயிற்றுக்கிழமை சிக்கித் தவித்த 78 பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் உள்பட 116 சுற்றுலாப் பயணிகளை போலீசார் மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் குழு மீட்டனர். பருவமழையின் போது ஏற்படும் விபத்துக்கள் காரணமாக கார்கர் மலைகள் மற்றும் பாண்டவ்கடா நீர்வீழ்ச்சிக்கு நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று உள்ளனர்.
மும்பையில் மேலும் 4 நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.