

பாட்னா,
பீகாரின் பக்சார் நகரில் கங்கையாற்றில் கடந்த சில நாட்களாக இறந்த உடல்கள் மிதந்து வந்துள்ளன. இதுபற்றி நகர நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.
இதுபற்றி பக்சார் நகர சப்டிவிசன் அளவிலான அதிகாரியான கே.கே. உபாத்யாய் கூறும்பொழுது, இந்த உடல்கள் கடந்த 5 முதல் 7 நாட்களாக ஆற்றில் மிதந்து வருவதுபோல் தெரிகிறது.
நம்முடைய பாரம்பரியத்தில் உடல்களை ஆற்றில் மூழ்க செய்வது என்பது கிடையாது. அதனால் இந்த உடல்களை தகனம் செய்வதற்கான நடவடிக்கைகளை நிர்வாகம் எடுத்து வருகிறது.
வாரணாசி, அலாகாபாத் ஆகிய நகரங்களில் இருந்து இந்த உடல்கள் மிதந்து வருகின்றனவா? என்பது பற்றி உறுதி செய்ய விசாரணை நடத்த வேண்டி உள்ளது. அதனால், அந்த பகுதிகளில் உள்ள அதிகாரிகளிடம் இதுபோன்று மீண்டும் நடக்காமல் இருக்க எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளோம் என்று கூறியுள்ளார்.