

புதுடெல்லி,
உக்ரைனில் போர் பிரதேசமான சுமியில் 700 இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளதால் மத்திய அரசு ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி உள்ளது. ரஷிய படையெடுப்பின் கீழ் உள்ள உக்ரைன் நாட்டில் பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் சிக்கி உள்ளனர்.
அந்த நாட்டின் வான்பரப்பு மூடப்பட்டு விட்டதால், அங்குள்ள இந்திய மாணவர்களை அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, பெலாரஸ் போன்றவற்றின் வழியாக மீட்பதற்கு மத்திய அரசு ஆபரேஷன் கங்கா திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் மீட்கப்பட்டு விட்டாலும், இன்னும் அங்கு ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அங்கு போர் பிரதேசமாக உள்ள சுமி நகரில் 700 இந்திய மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றனர். இது அவர்களின் குடும்பத்தினருக்கு மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது.
இந்நிலையில் புடாபெஸ்டில் இருந்து 1320 மாணவர்கள் இன்று வெளியேற்றப்படுவார்கள் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், புடாபெஸ்டில் இருந்து 1320 மாணவர்கள் இன்று வெளியேற்றப்படுவார்கள். டெல்லி வரும் 4 விமானங்கள் ஏற்கனவே புறப்பட்டுவிட்டன. 2 விமானங்களுக்கான செக்-இன் முடிந்தது, இன்றைய 7வது விமானத்திற்கான செக்-இன் தற்போது நடந்து வருகிறது. இந்தியா திரும்பிய தங்கள் குழந்தைகளை வரவேற்க பெற்றோர்கள் காத்திருக்க வேண்டும் என்று ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.