

பெங்களூரு,
இந்திய நாடாளு மன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில், 28 நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகத்தை பொறுத்தவரையில் 2 கட்டங்களாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 18, 23-ந் தேதிகளில் தேர்தல் நடக்கிறது.
ஏப்ரல் 18-ந் தேதி முதல்கட்டமாக உடுப்பி-சிக்கமகளூரு, ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா, துமகூரு, மண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர், பெங்களூரு புறநகர், பெங்களூரு வடக்கு, பெங்களூரு மத்திய, பெங்களூரு தெற்கு, சிக்பள்ளாப்பூர், கோலார் ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. 2-வது கட்ட தேர்தல் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ந் தேதி நடக்கிறது.
இதில் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தான் தேர்தல் அதிகாரிகள் ஆவார்கள். கலெக்டர் அலுவலகங்களில் வேட்பாளர்கள் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.
பெங்களூருவை பொறுத்தவரையில் பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு மத்திய ஆகிய 3 தொகுதிகள் உள்ளன. பெங்களூரு வடக்கு தொகுதி தேர்தல் அதிகாரியாக, பெங்களூரு நகர மாவட்ட கலெக்டர் விஜயசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் நகர கலெக்டர் அலுவலகத்தில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.
பெங்களூரு மத்திய தொகுதி தேர்தல் அதிகாரியாக பெங்களூரு மாநகராட்சி கூடுதல் கமிஷனர் (நிர்வாகம்) லோகேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது அலுவலகம் பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ளது.
பெங்களூரு தெற்கு தொகுதி தேர்தல் அதிகாரியாக மாநகராட்சி கூடுதல் கமிஷனர் (தென்மண்டலம்) எஸ்.எஸ்.நகுல் நியமிக்கப் பட்டுள்ளார். அவரது அலுவலகம் ஜெயநகர் 2-வது பிளாக்கில் அமைந்துள்ளது.
சம்பந்தப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்கள், அந்த அலுவலகங்களுக்கு சென்று மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். மனுக்களை தாக்கல் செய்ய வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மனுக்களை தாக்கல் செய்யும்போது, வேட்பாளருடன் குறைந்த எண்ணிக்கையில் கட்சி பிரமுகர்களை உள்ளே அனுமதிக்க தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 5 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
வேட்புமனுக்கள் தாக்கல் காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை ஆகும். மனுக்கள் பெறப்படும் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அதனை சுற்றி 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.