15 வயது சிறுமிக்கு 15 நாளாக பாலியல் வன்கொடுமை; 4 சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது

சத்தீஷ்காரில் 15 வயது சிறுமியை 15 நாளாக பாலியல் வன்கொடுமை செய்த 4 சிறுவர்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
15 வயது சிறுமிக்கு 15 நாளாக பாலியல் வன்கொடுமை; 4 சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது
Published on

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரின் பல்ராம்பூர் மாவட்டத்தில் ராஜ்பூர் காவல் நிலையத்தில் கடந்த நவம்பர் 30ந்தேதி தங்களது 15 வயது மகளை காணவில்லை என கூறி சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்த சிறுமி கடந்த நவம்பர் 20ந்தேதியில் இருந்து காணவில்லை.

இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் சிறுமி கண்டறியப்படவில்லை. இந்நிலையில், கடந்த 5ந்தேதி சிறுமி வீட்டிற்கு வந்துள்ளார். அவர் தனது பெற்றோரிடம் கூறிய விவரம் அவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதனை தொடர்ந்து அடுத்த நாள் போலீசில் தங்களுடைய மகளுடன் சென்று பெற்றோர் புகார் அளித்தனர். அதில், கடந்த நவம்பர் 20ந்தேதி பல்ராம்பூரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள அம்பிகாபூருக்கு சிறுமி சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு தெரிந்தவரான சித்தாந்த் சாகர் (வயது 22) என்பவரை சந்தித்துள்ளார்.

சாகர் சிறுமியை அழைத்து கொண்டு காந்தி நகரில் உள்ள தனது நண்பன் அறைக்கு அழைத்து சென்றுள்ளார். சாகரின் நண்பர்களான ஆலம் சாய் (வயது 22), வினய் திர்க்கி (வயது 22) மற்றும் சுரேந்திரா மின்ஜ் (வயது 20) ஆகியோர் மற்றும் 4 சிறுவர்கள் உள்பட 7 பேர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இது 15 நாட்களாக தொடர்ந்துள்ளது. இதன்பின்னர் சிறுமியை விடுவித்துள்ளனர். இதனை போலீசாரிடம் சிறுமி அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து எஸ்.பி. சாஹூ தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து சாகர் மற்றும் அவரது 3 நண்பர்களை ஞாயிற்று கிழமை கைது செய்தனர். திங்கட்கிழமை 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com